தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக உருவான பிரச்சினை கொலையில் முடிந்துள்ளது. தோட்டத்தில் தங்கியிருந்த கூலித் தொழிலாளி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அந்தப் பெண்ணின் உறவினரான 19 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் ராமச்சந்திரன் (45) என்பவர் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர் ஏற்கெனவே நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள திரையரங்கில் டிக்கெட் வழங்கும் பணியில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது களக்காடு பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று குழந்தைகளுக்கு தாயான இசக்கியம்மாளை பின்னர் காமநாயக்கன்பட்டிக்கு அழைத்து வந்த ராமச்சந்திரன், அங்குள்ள தோட்டத்தில் அவருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த இசக்கியம்மாள், தனது உறவினரான சுந்தரபாண்டியனிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து ராமச்சந்திரன் மீது சுந்தரபாண்டியனுக்கு ஆத்திரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நேற்று இரவு காமநாயக்கன்பட்டியில் உள்ள தோட்டத்துக்கு சென்ற சுந்தரபாண்டியன், ராமச்சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறுநாள் அந்த வழியாகச் சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் அவர் சடலமாக கிடப்பதை பார்த்து கொப்பம்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் உள்ளிட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ராமச்சந்திரனுக்கும் இசக்கியம்மாளுக்கும் இருந்த பழக்கம் மற்றும் அதுதொடர்பான பிரச்சினைகள் போலீஸாரின் கவனத்துக்கு வந்தன. இதன் அடிப்படையில் களக்காடு ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த சுந்தரபாண்டியனை போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்துக்கான முழுமையான காரணம், கொலை நடந்த விதம் மற்றும் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து கொப்பம்பட்டி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



