ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியர் குச்சியால் தாக்கியதாகவும், அதன்பின்னர் சிறுவன் மயங்கி விழுந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
விசாகப்பட்டினம் ஒன் டவுன் பகுதியில் உள்ள லிட்டில் கார்டன் பள்ளியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பிரணய் தேஜா என்ற அந்த சிறுவன், வியாழக்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அன்று காலை உடல்நலக்குறைவு எதுவும் இல்லாமல் இருந்த சிறுவன், தானாகவே பள்ளிக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், “காலை 8 மணியளவில் எழுந்த என் மகன் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கூறினான். தேர்வுகள் நெருங்கி வருவதால், அவனை பள்ளிக்கு அனுப்பினோம்” என்றார்.
பள்ளிக்குச் சென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, சிறுவனுக்கு ஏதோ நேர்ந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் தங்களுக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், அருகில் பணியாற்றும் சமையல்காரர்கள் மூலம் தகவல் கிடைத்ததாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுவனை கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு (KGH) கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பள்ளியில் நடந்தது குறித்து குடும்பத்தினர் விசாரித்தபோது, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்ததாக கூறப்படுகிறது. அதில், ஆசிரியர் ஒருவர் சிறுவனை குச்சியால் தாக்கியதாகவும், அதன்பின்னர் சிறுவன் ஆசிரியரின் மடியில் சரிந்து விழுந்ததாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
“என் மகனுக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை. முந்தைய இரவு மகிழ்ச்சியாக விளையாடினான். காலையிலும் நன்றாகத்தான் இருந்தான். காய்ச்சல் உள்ளிட்ட எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளியில் இதுபோன்ற உடல் ரீதியான தண்டனை மற்ற மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் திலீப் சக்ரவர்த்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். சிறுவன் பள்ளியில் இருந்து உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே சிறுவனின் உயிரிழப்புக்கான சரியான மருத்துவக் காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
CCTV காட்சிகளில், ஆசிரியர் சிறுவனின் ஆடையை கழற்றுவதும், அவரது கன்னத்தில் அறைவதும் பதிவாகியுள்ளது. இதையடுத்து சில நொடிகளிலேயே சிறுவன் ஆசிரியர் மீது சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: ஹார்முஸில் அமெரிக்கா-ஈரான் இடைடே பயங்கர மோதல்!. 21 இந்தியர்கள் உள்பட பல மாலுமிகள் சிக்கி தவிப்பு!. பகீர் வீடியோ!



