அமராவதி மாவட்ட மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 6 குழந்தைகள் தீவிர சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்ட மருத்துவமனையின் மகளிர் மருத்துவமனையில் இன்று ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் பச்சிளம் குழந்தைகளுக்காக செயல்பட்டு வந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் திடீரென தீப்பிடித்தது.
அந்த நேரத்தில் அந்த வார்டில் சுமார் 39 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தீ ஏற்பட்டதை அறிந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனடியாக மீட்பு பணிகளைத் தொடங்கினர். புகை சூழ்ந்த நிலையிலும், குழந்தைகளை ஒவ்வொருவராக பாதுகாப்பான பகுதிக்கு மாற்றுவதில் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பல குழந்தைகள் ஆபத்திலிருந்து மீட்கப்பட்டனர். இருப்பினும், தீயில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட குழந்தைகளில் 6 பேரின் உடல்நிலை காரணமாக அவர்கள் மேல் சிகிச்சைக்காக பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தீயை அணைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கு காரணம் என்ன?
மருத்துவமனையில் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவல்களில், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் பயன்படுத்தப்பட்ட வென்டிலேட்டரில் ஏற்பட்ட கோளாறு அல்லது வெடிப்பு காரணமாக தீ தொடங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால், வென்டிலேட்டர் வெடித்ததே விபத்துக்கான காரணம் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்ட பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தீ தடுப்பு நடவடிக்கைகள், அவசரகால பாதுகாப்பு வசதிகள், மின் இணைப்புகள் மற்றும் வார்டில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் ஆகியவை முறையாக செயல்பட்டனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்ற பிரிவிலேயே இந்த விபத்து நிகழ்ந்திருப்பது மருத்துவமனை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. விசாரணை முடிவில் விபத்துக்கான காரணம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: “ரூ.2 கோடி இருப்பதாக சொன்னால் என் அம்மாவே நம்ப மாட்டார்!” – அமைச்சர் ரமேஷ் பரபரப்பு பேச்சு..



