ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) மாஸ்கோவில் சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளையும், அவரது தனிப்பட்ட செய்தியையும் ரஷ்ய அதிபரிடம் அவர் தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோ சென்றடைந்த ஜெய்சங்கர், அதிபர் புதினுடனான சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும் விவாதித்தார். வரும் செப்டம்பர் 12-13 தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் புதின் இந்தியா வரவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. வர்த்தகம், எரிசக்தி, உரங்கள், அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவும் ரஷ்யாவும் தங்கள் பொருளாதார ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் முயலும் நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சந்திப்பின் போது, இந்தியாவும் ரஷ்யாவும் வலுவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன என்று கூறிய ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பொருளாதார உறவுகளை சுட்டிக்காட்டினார். அதாவது,நமது பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், எரிசக்தி, உரங்கள், அணுசக்தி உள்ளிட்ட பல பரிமாணங்கள் குறித்து விரிவாக பேசுவதில் நான் மகிழ்ச்சியடைவேன். ஒட்டுமொத்தமாக நமது பொருளாதார ஒத்துழைப்பு மிகக் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது என கருதுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் அதிபர் புதினை சந்திக்கவும், பின்னர் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக அவரை இந்தியாவிற்கு வரவேற்கவும் பிரதமர் மோடி ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
டெனிஸ் மாந்துரோவுடன் இணைந்து பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், “இந்தியா-ரஷ்யா கூட்டாண்மை தொடர்ந்து நெகிழ்ச்சியையும் தகவமைப்புத் தன்மையையும் வெளிப்படுத்தி வருகிறது. ஒரு சிக்கலான சர்வதேச சூழ்நிலைக்கு மத்தியிலும் நமது உறவு ஆழமாகத் தொடர்கிறது” என்றார்.
இந்தப் பயணத்தின் போது, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவையும் ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளார். முன்னதாக கடந்த ஜூலை 22-ஆம் தேதி மணிலாவில் நடைபெற்ற ஆசியான் (ASEAN) தொடர்புடைய கூட்டத்தின் இடையே ஜெய்சங்கரும் லாவ்ரோவும் சந்தித்து பேசினர். அந்த கூட்டத்தில், உக்ரைன் போர் மற்றும் மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அப்பகுதியில் உள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்தும் இந்தியாவின் கவலையை ஜெய்சங்கர் அப்போதே வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



