சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.
போட்டியின் தொடக்கத்தில் கார்வானா ஆதிக்கம் செலுத்தி ஆறு புள்ளிகள் முன்னிலையில் இருந்ததால் பிரக்ஞானந்தா கடுமையான பின்னடைவைச் சந்தித்திருந்தார். இருப்பினும், இறுதி நாளில் நடைபெற்ற ரேபிட் ஆட்டங்கள் இரண்டிலும் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று போட்டியைத் தன் பக்கம் திருப்பினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிளிட்ஸ் ஆட்டங்களைச் சமன் செய்த அவர், ஒட்டுமொத்தமாக 15-13 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றியைத் தமதாக்கிக் கொண்டார். இந்த வெற்றியின் மூலம் அவர் தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்துடன், கிட்டத்தட்ட ரூ. 2 கோடி பரிசுத் தொகையையும் வென்றுள்ளார்.
மறுபுறம், வின்சென்ட் கீமரை வீழ்த்திய வெஸ்லி சோ 18-12 என்ற கணக்கில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். தொடக்கக் காலத் தடையகங்களைத் தாண்டி பிரக்ஞானந்தா நிகழ்த்திய இந்த வியக்கத்தக்க கம்பேக் இந்திய செஸ் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
இந்தநிலையில், கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழகத்தின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டிகளில், அபாரமான மனஉறுதியுடனும், மதிநுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது அவரது அசாதாரண ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க பிரக்ஞானந்தாவை மனமார வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.



