நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது அடித்துச்செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்த பணத்தை கொள்ளையடித்த 29 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ. 58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரசுவா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு வங்கி லாக்கர், தாதிங் மாவட்டத்தில் உள்ள கால்ச்சி ஊரக நகராட்சி-4க்கு உட்பட்ட பெல்குகோலா அருகே திரிசூலி நதிக்கரையில் ஒதுங்கியது. லாக்கர் சிக்கியதைக் கண்ட அப்பகுதி மக்கள், அதிலிருந்த பணத்தை முண்டியடித்துக் கொண்டு எடுக்கத் தொடங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக 29 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் 92,68,505 நேபாள ரூபாய் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 58 லட்சம்) மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பவன் பவுடே, பீர் பகதூர் ராணா மகர், வினோத் கிரி, நவராஜ் பெட்டுவால், பூர்ண லால் சிரேஸ்தா, விஷ்ணுமணி அதிகாரி, கிருஷ்ண மகர், சிவ பகதூர் ராணா மகர், யுவராஜ் அதிகாரி, சுஷாந்த் சிரேஸ்தா, சுசிம்பகதூர் ராணா மகர், சபின் சிரேஸ்தா, பிரேம் பகதூர் ராணா மகர் மற்றும் அனில் பெட்டுவால் ஆகியோர் அடங்குவர். மீட்கப்பட்ட பணத்தின் உண்மையான ஆதாரம் குறித்தும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிறகும், நேபாளத்தில் ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கவில்லை. லெண்டே நதி அமைப்பின் மேல் பகுதிகளில் புதிதாக உருவாகியுள்ள ஏரியின் கரைகள் எந்த நேரத்திலும் உடைந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என சீனா நேபாளத்தை எச்சரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஏரி நீரின் நிறம் மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள சீனா, இது ஆபத்துக்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் கவலை தெரிவித்துள்ளது. நிலைமையை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், நதியின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளும், வெள்ளத்தின் பாதிப்புகளைச் சமாளிக்கும் பணிகளும் நேபாளம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 4,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். எனினும், சுமார் 2,500 பேரை இன்னும் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



