ஆன்லைன் கேமிங் செயலிகளைத் தொடர்ந்து, தற்போது ஆபாச இணையதளங்கள் மற்றும் பிரத்யேக என்க்ரிப்ட் (encrypted) செய்யப்பட்ட ரகசிய செயலிகள் மூலம் பயங்கரவாதிகள் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதை இந்தியப் பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்டறிந்துள்ளன.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் பயங்கரவாத அமைப்புகள், ஜம்மு காஷ்மீரில் ஆள்சேர்ப்பு மற்றும் ரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இத்தகைய ரகசிய வழிகளைப் பயன்படுத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசஞ்சர் மற்றும் சிக்னல் போன்ற பொதுவான சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை பயங்கரவாதிகள் தவிர்த்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இத்தகைய ஆபாச இணையதளங்களை, விபிஎன் (VPN – Virtual Private Network) உதவியுடன் அவர்கள் அணுகுகின்றனர். அருகில் உள்ளவர்களுடன் ‘டேட்டிங்’ செல்வதற்கான வசதி என்ற பெயரில் இயங்கும் ரியல்-டைம் சாட் கருவிகளைப் பயன்படுத்தி, பயங்கரவாதக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் ஆட்களுக்கு ரகசிய செய்திகளைப் பரிமாறுகின்றனர்.
அடையாளத்தை எவ்வாறு மறைக்கிறார்கள்?
பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க, ‘Tor’ (The Onion Router) நெட்வொர்க் அடிப்படையிலான ‘Coatex’ மற்றும் ‘Conion’ போன்ற மெசேஜிங் செயலிகளை பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் இணையப் போக்குவரத்து பல்வேறு முனைகளில் என்க்ரிப்ட் செய்யப்படுவதால், தகவலை அனுப்புபவர் மற்றும் பெறுபவரின் அடையாளம் முற்றிலும் மறைக்கப்படுகிறது.
மேலும், சிம் கார்டு அல்லது மொபைல் எண் இல்லாமல் செயல்படும் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சேஜிங் செயலி ஒன்றையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர். இதுதவிர, ‘Moonchat’ போன்ற ரகசியத் தகவல் பரிமாற்ற செயலிகள் மற்றும் வியட்நாம், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய சில செயலிகளையும் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.
தனியுரிமை மற்றும் தணிக்கைக்கு எதிரான நோக்கங்களுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Tor நெட்வொர்க்கின் ரகசிய தகவல் பரிமாற்ற தன்மையை, தற்போது பயங்கரவாத அமைப்புகள் தங்களின் நாசவேலைகளுக்குப் பயன்படுத்தி வருவது பாதுகாப்பு நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.



