சேலம், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் பாசன ஆதாரமாகவும், பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் ஜீவநாடியாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
எனினும், இந்த ஆண்டு தொடக்கத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழையின்றி அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், குடிநீர்த் தேவைக்கு மட்டுமே நீர் எடுக்கப்பட்டு வந்ததாலும் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகரிலிருந்து உபரி நீர் தமிழகத்திற்குத் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மளமளவென உயர்ந்து நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியது.
இதையடுத்து, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இதற்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் ஓமலூர் விமான நிலையம் வந்தடைந்த தமிழக முதல்வர் விஜய்க்கு, அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் அரசு உயரதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர், வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு மேட்டூர் அணையை வந்தடைந்தார். காலை 11.40 மணியளவில் அணையின் வலது கரையில் உள்ள மேல்மட்ட மதகின் மின்விசையை இயக்கி, பாசனத்திற்கான தண்ணீரை முதல்வர் திறந்து வைத்தார். அப்போது சீறிப்பாய்ந்து வெளியேறிய காவிரி நீரில் மலர்களையும் நெல்மணிகளையும் தூவி அவர் வணங்கினார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேட்டூர் அணையைத் திறந்து வைப்பது இதுவே முதல்முறையாகும்.
FULL GLIMPSE 📽️ : @TVKVijayHQ At A Framer House ! (NWM)#Mettur | #CMJosephVijay pic.twitter.com/yidb2xDiky
— Prakash Vijay (@PrakazVijay_Of) September 1, 2026
இதனைத் தொடர்ந்து சென்னை திரும்பும் வழியில், சேலம் மாவட்டம் சின்னக்காவூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் வீட்டிற்கு முதல்வர் விஜய் திடீரென நேரில் சென்று ஆச்சரியப்படுத்தினார். அங்கிருந்த மூதாட்டி ஒருவர் பாசத்துடன் முதல்வரின் கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு விவசாயக் குடும்பத்தினருடன் அமர்ந்து உரையாடிய முதல்வர், அப்பகுதியில் நடைபெற்று வரும் வேளாண் பணிகள் மற்றும் விவசாயிகளின் முக்கியக் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்தார். தமிழக முதல்வரின் இந்தத் திடீர் வருகையும் எளிமையான சந்திப்பும் தங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளதாக அந்த விவசாய குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Read More : “இரட்டை வேடம் போடாதீங்க!”. பாக். பிரதமரை மேடையில் வைத்தே வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி!



