கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கேக் நகரில் நடைபெறும் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்ற இந்த அமர்வில், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தனது கடுமையான நிலைப்பாட்டைப் பதிவு செய்தது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாத விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு எவ்வித இடமும் இருக்கக் கூடாது” என்று உறுதியாகத் தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கான நிதியுதவி, ஆள்சேர்ப்பு, தீவிரவாதப் பிரச்சாரம் மற்றும் அவர்களின் பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட முழு கட்டமைப்பு அமைப்பையும் முற்றிலும் தகர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
போர்க்களத்தில் எந்தச் சிக்கலுக்கும் தீர்வு காண முடியாது என்று குறிப்பிட்ட மோடி, அனைத்துப் போர்களும் மோதல்களும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழிகளிலேயே தீர்க்கப்பட வேண்டும் என்றார். உச்சிமாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்த பிரதமர் மோடி, உக்ரைன் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார். காந்தி மற்றும் புத்தரின் மண்ணான இந்தியா எப்போதும் அமைதிக்கான பாதையையே வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார்.
ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் அமெரிக்க-இஸ்ரேல் – ஈரான் மோதல்களால் உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு பொருளாதார அழுத்தம் அதிகரித்துள்ள சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.



