தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், மாநில முதலமைச்சருமான விஜய்யின் அரசியல் நகர்வுகள் தற்போது டெல்லி வரை எதிரொலித்து, காங்கிரஸ் கூட்டணியை உலுக்கி வருகின்றன. 2029 நாடாளுமன்றத் தேர்தலை முதன்மை இலக்காக கொண்டு, உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய வடமாநிலங்களிலும் தவெகவின் கொடியை நட்ட விஜய் திட்டமிட்டு வருகிறார். அண்மையில் வெளியான தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில், பிரதமராக யாருக்கு ஆதரவு என்ற பட்டியலில் 9.2% வாக்குகள் பெற்று விஜய் 3-வது இடத்தைப்பிடித்தது டெல்லி தலைவர்களை உற்றுநோக்க வைத்துள்ளது.
முன்னதாக சென்னையில் ராகுல் காந்தியின் தூதர்களான மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தியை விஜய் சந்திக்க மறுத்தது, காங்கிரஸ் வட்டாரத்தில் ஏற்கனவே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கொடுத்த அட்வைஸ் காங்கிரஸ் முகாமிற்கு மேலும் அடியைக் கொடுத்துள்ளது. மாநிலங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் எம்.பி.க்கள் அங்குள்ள முதலமைச்சர்களைச் சந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட சபாநாயகர், “விஜய்யைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்; அரசியல் கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தவர் அவரிடமிருந்து நீங்கள் பெற வேண்டிய அனுபவங்கள் அதிகம்” எனக் கூறியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
ஓம் பிர்லாவின் வாய்மொழி உத்தரவையடுத்து, தற்போது வடமாநில சமூக வலைதளங்களில் விஜய்யின் ஆளுமை குறித்த வீடியோக்கள் இந்தியில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன. சபாநாயகரின் வார்த்தைகளைக் கேட்டு, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சயோனி கோஷ் உட்பட பல வெளிமாநில எம்.பி.க்கள் விஜய்யை சந்திக்க சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இந்த மக்கள் அலையைக் கண்டு உற்சாகமடைந்துள்ள தவெக நிர்வாகிகள், “1996-ல் தேவகவுடா தேசிய அரசியலில் ஏற்படுத்திய திருப்பத்தை போல, 2029-ல் 100 சீட்களைப் பிடித்து விஜய்யை பிரதமராக்குவோம்” எனத் தீவிரமாக முழங்கி வருகின்றனர்.
மோடிக்கு மாற்றாகத் தன்னை மட்டுமே தேசியத் தலைவராகக் காட்டி வரும் ராகுல் காந்திக்கு, பாஜகவைச் சேர்ந்த சபாநாயகரே விஜய்யை உயர்த்திப் பேசுவதும், வடமாநிலங்களிலும் விஜய்க்கு ஆதரவு பெருகுவதும் பெருத்த தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் இந்த தேசிய அரசியல் பாய்ச்சலை எதிர்கொள்ள முடியாமல் ராகுல் தரப்பு கடும் அப்செட்டில் இருப்பதாகத் தெரிகிறது.



