திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் வாழ்க்கையை சில நொடிகளில் சிதைத்துள்ளது கேரளாவில் நடந்த கோர விபத்து. சாலையோரம் பைக்கை நிறுத்தி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 3 வயது மகன் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் மூவரும் உயிரிழந்தனர்.
திருச்சூர் மாவட்டம் குருவாயூர் – குன்னம்குளம் சாலையில் சனிக்கிழமை நள்ளிரவில் இந்த விபத்து நடந்தது. முனீர் (35), அவரது மனைவி சஃப்னா (25), மகன் யாமில் ஐபக் (3) ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர்.
வழியில் தொலைபேசி அழைப்பு வந்ததால், முனீர் சாலையோரமாக பைக்கை நிறுத்தியுள்ளார். மூவரும் அங்கே நின்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், அதே திசையில் வேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
சாலையோரம் நின்றிருந்த குடும்பத்தினர் மீது கார் பலமாக மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும், முனீர், சஃப்னா மற்றும் சிறுவன் யாமில் ஐபக் ஆகிய மூவரையும் காப்பாற்ற முடியவில்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஒரே விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் உள்ளிட்ட விவரங்களை விசாரித்து வருகின்றனர்.
Also Read: “கைலாசா எங்கிருக்குனு இத்தனை நாள் சொல்லல!”… பல ஆண்டுகளுக்குப் பிறகு முகவரியை வெளியிட்ட நித்தியானந்தா!



