டெல்லியில் நாளை (செப்டம்பர் 11) முதல் 13 வரை நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்காக டெல்லி முழுவதுமே ஒரு பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது.
துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி மாவட்டத்தின் முக்கிய சாலைகள், வெளிநாட்டு விருந்தினர்கள் தங்கும் தாஜ் மான் சிங் மற்றும் ஆப்ரி ஹோட்டல்கள் உள்ளிட்ட பகுதிகள் இந்த 500 சிசிடிவி கேமராக்கள் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், பிரதான மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தைச் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
7,000 பாதுகாப்புப் பணியாளர்கள் குவிப்பு: டெல்லி காவல்துறை, துணை ராணுவப் படையினர், என்.எஸ்.ஜி (NSG) கமாண்டோக்கள் மற்றும் பிற பாதுகாப்பு முகாமைகளைச் சேர்ந்த சுமார் 7,000 வீரர்களும் அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம், தங்கும் விடுதிகள் மற்றும் மாநாட்டு அரங்கம் இணைக்கும் பாதைகளில் உளவுத்துறை மற்றும் எஸ்பிஜி (SPG) அதிகாரிகளுடன் இணைந்து பலத்த பாதுகாப்புப் படை கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. விவிஐபி (VVIP) வருகையையொட்டி டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்களும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மறுபுறம், டெல்லி மாநகராட்சி சார்பில் நகரை அழகுபடுத்தும் மற்றும் தோட்டக்கலைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டைக் சிறப்பிக்கும் வகையில் 15 இடங்களுக்கு மேல் மலர் பலகைகளும், 15,000-க்கும் மேற்பட்ட தொட்டிச் செடிகளும் வைக்கப்படவுள்ளன. முக்கிய சந்திப்புகள், சாலைகள் மற்றும் சாணக்கியபுரியில் உள்ள பிரிக்ஸ் நட்பு ரோஜா தோட்டம் (BRICS Friendship Rose Garden) உள்ளிட்டவற்றில் அழகுபடுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் சர்வதேச பயணிகளுக்காக டெல்லி விமான நிலையத்தின் முனையத்தில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டுப் பங்கேற்பாளர்களுக்கெனத் தனிப்பயனாக்கப்பட்ட குடிவரவு கவுன்ஸ்டர்களும், விமானங்களின் தங்கு தடையற்ற இயக்கத்திற்கும் தரையிறங்குவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகமான DIAL தெரிவித்துள்ளது.



