சுடச்சுட டீ, காபி குடிப்பவரா நீங்கள்? 3 மடங்கு அதிகரிக்கும் கொடிய புற்றுநோய் ஆபத்து..! மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி..!

tea

தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களை மிதமான சூட்டில் குடிக்காமல், அதிகப்படியான கொதிக்கும் சூட்டிலேயே தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் (esophageal cancer) ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகம் என பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுமார் 10 லட்சம் பேரிடம் நடத்திய இந்த விரிவான ஆய்வு முடிவு, புற்றுநோய் தொடர்பான புகழ்பெற்ற சர்வதேச மருத்துவ ஆய்விதழான ‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கேன்சர்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


ஆய்வின்படி, 65 டிகிரி செல்ஷியஸ் அல்லது அதற்கு மேற்பட்ட அதிக வெப்பநிலையில் திரவங்களை அருந்துவது ஆபத்தானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. நடுத்தர வயதுடைய சுமார் 9 லட்சத்து 77 ஆயிரம் பேரின் உணவுப் பழக்கவழக்கங்களை ஆராய்ந்ததில், கொதிக்கும் சூட்டிலுள்ள பானங்களை ஒரு நாளைக்கு ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட முறை அடிக்கடி குடிப்பவர்களுக்கு இந்நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் கணிசமாக அதிகரிப்பது உறுதியாகியுள்ளது. உணவுக்குழாயில் இருந்து இரைப்பைக்குச் செல்லும் பகுதியிலுள்ள மென்மையான செல்களை அதிக வெப்பம் கொண்ட திரவங்கள் தொடர்ந்து காயப்படுத்தி சேதப்படுத்துவதே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

பொதுவாக அடுப்பில் கொதிக்கும் நிலையில் தயாரிக்கப்படும் தேநீரின் வெப்பநிலை 100 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும் நிலையில், கோப்பைகளில் மாற்றப்பட்ட பிறகும் அதன் வெப்பநிலை 90 முதல் 95 டிகிரி செல்ஷியஸ் வரை நீடிக்கிறது. இதில் பால் சேர்ப்பது வெப்பநிலையை ஓரளவு குறைத்தாலும், உடனடியாகப் பருகாமல் சில நிமிடங்கள் ஆறவிட்டு குடிப்பதே பாதுகாப்பானது என பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு அறிவுறுத்துகிறது. பொதுவாக வெளிநாடுகளில் வழங்கப்படும் பானங்களுக்கு 49 முதல் 60 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பநிலையே குடிப்பதற்கு உகந்த அளவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

அதேநேரம், உணவுக்குழாய் புற்றுநோய் என்பது மிக அரிதான பாதிப்பு என்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதிக வெப்ப பானங்களைத் தவிர்ப்பதன் மூலம் உணவுக்குழாய் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் பத்தில் ஒருவரை காப்பாற்ற முடியும் என்றாலும், இப்புற்றுநோய்க்கு புகைபிடித்தல் மற்றும் மதுப்பழக்கமே பிரதான காரணங்களாக உள்ளன. எனவே நெஞ்செரிச்சல், தொண்டை அல்லது மார்புப் பகுதியில் வலி, தொடர் அஜீரணம் மற்றும் திடீர் எடை குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதுடன், புகை மற்றும் மதுவை முழுமையாகத் தவிர்ப்பதே புற்றுநோயைத் தடுக்கும் முதன்மை வழியாகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More : இனி விசில் சின்னம் நிரந்தரம்..!! தவெக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவிப்பு..!! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி..!!

Next Post

மண்டை பிளக்கும் ஒற்றைத் தலைவலியா? முழுமையாக தடுப்பது எப்படி? என்ன சிகிச்சை பலன் தரும்? டாக்டர்கள் சொன்ன தீர்வு..!

Fri Sep 11 , 2026
நெற்றியைத் துளையிடுவது போன்ற தாங்க முடியாத வலியுடன் இருண்ட அறையில் முடங்க வைக்கும் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியால், உலகளவில் சுமார் ஏழு பேரில் ஒருவர் (100 கோடிக்கும் அதிகமானோர்) பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் மைக்ரேன் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. நரம்பியல் மற்றும் மரபியல் ரீதியாக மூளையில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்புற காரணிகளால் தூண்டப்படும்போது, குறிப்பிட்ட […]
Headache 2026

You May Like