மழைநீர் தேங்கியிருந்த பகுதியில் காலணிகள் நனையக்கூடாது என்பதற்காக, முதியவர் ஒருவரின் முதுகில் ஏறி சென்ற வருவாய் அதிகாரி, இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அரசு அதிகாரி மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தில் உள்ள மாதா கிராம பஞ்சாயத்து பகுதியில் கள ஆய்வுக்கு சென்ற வருவாய் அதிகாரி நிலேஷ்நம்தேவ் என்பவர் தண்ணீர் தேங்கியிருந்த ஓடையை கடக்க 65 வயது முதியவரான லால்வாகேவத் என்பவரின் முதுகில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த காட்சி வீடியோவாக வெளியாகி பரவியதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோவில் மழைநீர் தேங்கியிருந்த இடத்தில் அதிகாரி ஒருவர் நடந்து செல்லாமல், அங்கிருந்த வயதான நபரின் உதவியுடன் அந்தப் பகுதியை கடந்து செல்வது பதிவாகியுள்ளது. குறிப்பாக, அதிகாரி தனது காலணிகள் தண்ணீரில் நனையாமல் இருப்பதற்காக முதியவரின் முதுகில் அமர்ந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சி பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அரசுப் பணியில் இருக்கும் அதிகாரி ஒருவர் பொதுமக்களிடம் இவ்வாறு நடந்துகொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். மேலும், அதிகாரியின் செயல்பாடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த நிலையில், புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு அதிகாரிகள் பொதுமக்களுடன் கண்ணியமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



