லண்டன் நகரின் முக்கிய பகுதிகளை மேலிருந்து ரசிக்கும் வகையில் அமைந்துள்ள பிரபலமான சொகுசு விடுதியில் முதல்வர் விஜய் தங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது. தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரும் நோக்கில் 6 நாள் அரசுமுறை பயணமாக லண்டன் சென்றுள்ள அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த பயணத்தின் போது லண்டன் பிரிட்ஜ் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ‘தி ஷார்ட்’ கட்டிடத்தில் செயல்படும் ‘ஷாங்க்ரி-லா தி ஷார்ட்’ நட்சத்திர விடுதியில் முதல்வர் விஜய் தங்கியுள்ளார். லண்டனின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கட்டிடம், அதன் உயரம் மற்றும் ஆடம்பர வசதிகளுக்காக உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
‘தி ஷார்ட்’ கட்டிடத்தின் 34-வது தளம் முதல் 52-வது தளம் வரை ஷாங்க்ரி-லா ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்குள்ள அறைகளில் இருந்து தேம்ஸ் நதி, லண்டன் பாலம் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளை உயரமான கோணத்தில் ரசிக்க முடியும். ஹோட்டலில் மொத்தம் 185 அறைகள் உள்ளதுடன், 14 டீலக்ஸ் அறைகள் மற்றும் 3 சிறப்பு எக்ஸிக்யூட்டிவ் அறைகளும் உள்ளன.
தங்கும் வசதிகளுடன் உணவகங்கள், தனியார் நிகழ்ச்சிகளுக்கான இடங்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள், நிறுவனங்களின் கூட்டங்களுக்கு ஏற்ற வசதிகள் என பல்வேறு சேவைகளும் ஹோட்டலில் உள்ளன. அறைகளில் காலநிலை மற்றும் விளக்கு கட்டுப்பாட்டு வசதிகள், தானியங்கி பிளாக்-அவுட் திரைகள் உள்ளிட்ட நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த சொகுசு விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கான கட்டணம் அறையின் வகை மற்றும் தேர்வு செய்யப்படும் வசதிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. ஹோட்டலின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.96,000 முதல் ரூ.2.70 லட்சம் வரை ஒரு நாள் தங்கும் கட்டணம் செல்லக்கூடும்.
இதற்கிடையில், லண்டனில் வசிக்கும் தமிழர்கள் முதல்வர் விஜயை சந்திக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு வெளியே தமிழர்கள் காத்திருக்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
முதல்வர் விஜய் வரும் 15-ம் தேதி லண்டனில் வசிக்கும் தமிழர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, லண்டனில் நடைபெறும் முக்கியமான கார் பந்தய நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.
புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் ரேஸ் சர்க்யூட்டில் நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதல்வர் விஜய் பச்சைக்கொடி காட்டி தொடங்கி வைக்கிறார். இந்த போட்டியில் நடிகர் அஜித்குமாரும் பங்கேற்கிறார். இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணிக்கு தொடங்கும் பந்தயம், இரவு 11.45 மணியளவில் நிறைவடைகிறது.



