தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைப்பது தொடர்பான வழக்கில், “நவோதயா பள்ளிகளைத் தமிழகத்திற்குள் வரவிடாமல் தடுப்பதா? தமிழக மண்ணில் ஹிந்தியே கற்பிக்கப்படக் கூடாது என்ற மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (செப். 17) விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதிடுகையில், “தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிடக் கூடாது. மாநிலத்தில் ஏற்கனவே தரமான அரசுப் பள்ளிகள் போதுமான அளவில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஹிந்தி கற்பதற்கு எந்தத் தடையும் இல்லை; ஆனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கல்விக் கொள்கை உள்ளது. நவோதயா பள்ளிகள் அமைப்பது மாநில கல்விக் கொள்கைக்கு எதிரானது.
இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் நாடு. நவோதயா பள்ளி விவகாரம் கொள்கை ரீதியானது மட்டுமல்ல, நிதி சார்ந்த பிரச்சனையும் கூட. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கல்விக்காக ரூ.5,000 கோடிக்கும் மேல் நிதி பாக்கி வர வேண்டியுள்ளது,” என்று தெரிவித்தார்.
தமிழக அரசின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி பிறப்பித்த உத்தரவில், நவோதயா பள்ளிகளை வரவிடாமல் தடுப்பது ஏற்புடையதல்ல. தமிழக மண்ணில் ஹிந்தி கற்பிக்கப்படவே கூடாது என்ற பிடிவாதமான மனநிலையை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
நவோதயா பள்ளிகள் திட்டம் மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு எதிரானது கிடையாது. மொழி விவகாரத்தில் உள்ள முரண்பாடுகளை மத்திய அரசுடன் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஹிந்தி திணிப்பு மட்டுமே இதற்கு காரணமா?
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உரிய நிலங்களைக் கண்டறிந்து ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு மாறியிருப்பதால், நவோதயா பள்ளிகள் குறித்த அணுகுமுறையிலும் மனநிலையிலும் மாற்றம் இருக்கும் என நம்புகிறோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல், மத்திய அரசுடன் நேரில் அமர்ந்து பேசி சுமூக முடிவை எட்ட வேண்டும் என்று தெரிவித்தனர்.



