தமிழக அரசுத் துறைகளில் ஊழலை ஒழித்து, நிர்வாகச் சீர்திருத்தங்களை வேகப்படுத்தும் நோக்கில், ஒரே அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முகாமிட்டுள்ள ஊழியர்களை கண்டறிந்து உடனடியாக பணியிட மாற்றம் செய்ய தவெக அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அரசு அலுவலகங்களில் ஒரே இடத்தில் நீண்ட காலம் ஒரே நபர் பணியாற்றி வரும்போது, நிர்வாகத்தில் மந்தநிலை ஏற்படுவதோடு, பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் தேவையில்லாத நெருக்கம் ஏற்பட்டு முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக அரசு கருதுகிறது. குறிப்பாகக் கணக்கு, நிர்வாகம் மற்றும் நிதி சார்ந்த பிரிவுகளில் பல ஆண்டுகளாக ஒரே நபர்கள் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக, தமிழக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை சார்பில் அனைத்துத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில், நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலகக் கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட நிலைகளில் உள்ள ஊழியர்கள், ஒரே இடத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளைத் தாண்டியோ அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாகவோ பணியாற்றி வருகிறார்களா என்ற முழு விவரங்களையும் துல்லியமாகச் சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பதவி உயர்வு பெற்று வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட பிறகு, சில மாதங்களிலேயே அதிகார செல்வாக்கைப் பயன்படுத்தியோ அல்லது நிர்வாகக் காரணங்களைக் காட்டியோ மீண்டும் பழைய இடத்திற்கே ‘ரிட்டன்’ வந்த ஊழியர்கள் யார் யார், அவர்கள் எப்போது மீண்டும் பழைய இடத்திற்கு வந்தார்கள், அதற்கான பின்னணி என்ன என்பது குறித்த விபரங்களையும் அறிக்கையில் கட்டாயம் இணைக்க வேண்டும் என கறாராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை ‘அதிமுக்கியத்துவம் வாய்ந்தது’ என குறிப்பிட்டுள்ள அரசு, அனைத்துத் துறைகளும் ஊழியர்களின் முழுப் பட்டியலையும் தயாரித்து வரும் செப்டம்பர் 23-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கெடு விதித்துள்ளது. தவெக அரசின் இந்தத் திடீர் களையெடுப்பு உத்தரவு, பல ஆண்டுகளாக ஒரே நாற்காலியில் அமர்ந்து கோலோச்சி வந்த பல ‘சீனியர்’ அரசு ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளிடையே பெரும் கலக்கத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.



