மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவின் மிர்சா காலிப் தெருவில் உள்ள நான்கு மாடி ஹோட்டல் ஒன்றில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணியளவில் திடீரென தீப்பற்றியது. இதில் மருத்துவச் சிகிச்சைக்காக கொல்கத்தா வந்திருந்த வங்கதேசத்தை சேர்ந்த 9 பேர் மீட்கப்பட்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த ஹோட்டலில் போதிய தீயணைப்புப் பாதுகாப்பு வசதிகள் இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கொல்கத்தா சம்பவத்திற்கு முதல் நாள், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பிரபல புனிதத் தலமான தாராபீத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. வரவேற்பறை அருகே தொடங்கிய தீ தரைத்தளம் மற்றும் இரண்டாம் தளத்திற்குப் பரவியதுடன், அடர்ந்த புகை கட்டடம் முழுவதும் சூழ்ந்ததில் மேகாலயாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 9 பக்தர்கள் மூச்சுத்திணறியும் தீக்காயங்களாலும் உயிரிழந்தனர். ‘ஸ்ராவண்’ மாதத்தின் கடைசி திங்கள்கிழமையையொட்டி வழிபாடு செய்ய வந்த பக்தர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
விபத்தின் போது தாராபீத் ஹோட்டலில் மொத்தம் 43 பேர் தங்கியிருந்த நிலையில், எஞ்சியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கட்டடம் முழுவதும் இருளில் மூழ்கிப் பயணிகள் பெரும் பீதியடைந்தனர். பாதுகாப்பு விதிகளை மீறியதாக ஹோட்டல் உரிமையாளர் கல்யாண் பால் உட்பட இருவரைக் கைது செய்துள்ள போலிஸார், இரு இடங்களிலும் தீ விபத்துக்கான முதன்மை காரணங்கள் குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு ஹோட்டல் தீ விபத்துகளில் வங்கதேச நாட்டவர்கள் மற்றும் மேகாலயாவைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட மொத்தம் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



