தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்த திட்டங்களில், பெண்களின் அன்றாட வாழ்க்கையிலும் பொருளாதார சுமையைக் குறைப்பதிலும் மிக முக்கியமான திட்டமாக ‘வெற்றிப் பயணம்’ திட்டம் பார்க்கப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தைப் பெருமளவில் விரிவாக்கம் செய்யும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ என்ற புதிய திட்டம் அக்டோபர் 2-ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் அமலுக்கு வரவுள்ளதாகச் சட்டமன்றப் பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான மாநகரம் மற்றும் நகரப் பேருந்துகள் மட்டுமன்றி, மாவட்டங்களுக்கு இடையே இயங்கும் சாதாரண பேருந்துகள் மற்றும் டீலக்ஸ் (Deluxe) பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றிப் பயணிக்கலாம்.
இத்திட்டத்தைப் பயன்படுத்த எவ்வித வருமான உச்சவரம்போ அல்லது பயணங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடோ விதிக்கப்படவில்லை.
இத்திட்டத்தின் கீழ் மகளிர் மட்டுமன்றி, திருநர் மற்றும் திருநங்கைகளும் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள் மற்றும் பணிகளுக்குச் செல்லும் பெண்களுக்குப் பயணக் கட்டணம் பெரும் சவாலாக இருந்து வந்தது. இத்திட்டத்தின் மூலம் அவர்கள் எவ்விதக் கட்டணமுமின்றிப் பயணிக்க முடியும். சிறு தொழில் புரியும் பெண்கள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக நகரங்களுக்கு வர வேண்டிய தாய்மார்களுக்கு இத்திட்டம் பெரும் நிதிப் பாதுகாப்பை அளிக்கிறது.
“வெற்றிப் பயணம் என்பது வெறுமனே கட்டணமில்லாப் பேருந்து பயணம் மட்டுமல்ல; அது ஒரு மாணவியின் கல்வி, ஒரு தொழிலாளியின் வேலைவாய்ப்பு, ஒரு தாயின் குடும்பப் பொறுப்பு மற்றும் ஒரு தொழில்முனைவோரின் முன்னேற்றம் ஆகியவற்றை உறுதி செய்யும் சமூக முதலீடு” என முதலமைச்சர் பேரவையில் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துப் பெண்களும் தடையின்றிப் பயன்பெறும் வகையில் தவெகவின் தேர்தல் வாக்குறுதியான இத்திட்டம் விரிவுபடுத்தப்படுவதால், இத்திட்டத்தை நடத்துவதற்காகத் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் தோராயமாக ரூ. 6,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



