மதுபானங்களில் கலப்படமா..? குவாலிட்டியில் கைவைக்கும் தமிழ்நாடு அரசு..! அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

Tasmac 2026 1

டாஸ்மாக் விற்பனை நிலையங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களில், ஆல்கஹால் அளவு அரசு நிர்ணயித்த சரியான அளவில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.


தற்போது டாஸ்மாக் நிர்வாகம் 7 நிறுவனங்களிடமிருந்து பீர் வகைகளையும், 11 முன்னணி நிறுவனங்களிடமிருந்து பல்வேறு மது வகைகளையும் தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளின்படி, ‘என்ரிகா’ நிறுவனத்தின் 11 மது வகைகளின் விற்பனைக்குக் கடந்த 13-ஆம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் திடீர் தடை விதித்தது. ஆனால், அடுத்த நாளே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் அத்தடையை விலக்கிக்கொள்ளப் பரிந்துரை செய்தது பொதுமக்களிடையேயும் டாஸ்மாக் ஊழியர்களிடையேயும் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மதுபானங்களின் தரத்தை எவ்வித சமரசமும் இன்றி உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்த நிலையில், தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளை அரசு மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மதுபான ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மது வகைகளில் இருந்து முதற்கட்டமாக மாதிரிகள் எடுக்கப்பட்டு, சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ தரச்சான்றின் அடிப்படையில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகள் முழுமையாகச் சரிபார்த்த பின்னரே, மதுபானங்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்டு டாஸ்மாக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும்.

இதுமட்டுமின்றி, டாஸ்மாக் கண்காணிப்பு அதிகாரிகளும் நேரடியாகக் கடைகளுக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு பாட்டில்களைச் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்துவர். குறிப்பாக, என்ரிகா நிறுவன விவகாரத்திற்குப் பிறகு அனைத்து மதுபான ஆலைகளிலும் தயாராகும் மது வகைகளில் உள்ள ஆல்கஹால் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் உள்ளதா என்பதை அதிகாரிகள் மிகக் கவனத்துடன் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என அரசு திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

Read More : அதிகாரிகள் வேண்டுமா? நாங்கள் வேண்டுமா? எச்சரிக்கும் கம்யூனிஸ்ட்..!! ஷாக்கில் முதல்வர் விஜய்..!!

You May Like