சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மாவட்ட பொறுப்பாளர்கள் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, இது தொடர்பாக ஆலோசிக்க அதிமுக மற்றும் பாஜகவை தவிர்த்து 60 கட்சிகளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைத்தனர்.
இதன்படி, சென்னை தியாகராய நகரில் உள்ள விடுதியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆம்ஆத்மி உள்ளிட்ட 49 கட்சிகள் பங்கேற்றன. பாமக, நாம் தமிழர் கட்சி, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. தேமுதிக சார்பில் பார்த்தசாரதியும், ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகத்தின் சுதாகரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மாவட்ட பொறுப்பாளர்கள் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முகவர்களை ஒருங்கிணைப்பது எப்படி, அவர்களிடம் எடுத்துரைத்து அவர்கள் மூலமாக அதிமுகவின் பிரச்சாரத்தை வீடு வீடாக கொண்டு சேர்ப்பது எப்படி என்று முதலில் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும் பயிற்சியை பழனிசாமி தொடங்கிவைத்தார்.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; தங்களுக்கான மாவட்டங்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நேரில் சென்று, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்காணிக்க வேண்டும். அப்பணியை முழுமையாக செய்து முடிக்க வேண்டும். இதில் பூத் கமிட்டி நிர்வாகிகளை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். இவர்களை ஒருங்கிணைக்க தகவல் தொழில்நுட்ப அணியினர் உதவுவார்கள் என தெரிவித்துள்ளார்.



