தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்த அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலகினார். இதை அடுத்து தமிழக பாஜக மாநில தலைவராக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஒருமனதாக தேர்வானார். மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஒரு நாளுக்குப் பிறகு அண்ணாமலை கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
மேலும் அவர் மத்திய இணை அமைச்சர் ஆகலாம் என்றும் பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையொட்டி அவர் ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இந்த தகவல் அனைத்தும் வெறும் வதந்தி என்பது நாளடைவில் தெரிய வந்தது.
2024 தேர்தலில் பாஜக கூட்டணி இல்லாமலே போட்டியிட்டு, தமிழகத்தில் 3% வாக்குகளை 11% ஆக உயர்த்தியது, அண்ணாமலையின் கடின உழைப்பால் தான் என்று கட்சி நெருக்கமானோர் பாராட்டுகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல சந்தர்ப்பங்களில், “அண்ணாமலை, மாநில அரசியலில் மட்டும் அல்ல, தேசிய அரசியலிலும் முக்கிய பங்கு வகிப்பார்” என பாராட்டி இருந்தார்.
தற்போது அண்ணாமலை எந்த ஊடகங்களுக்கும் பேட்டி தரவில்லை. பாஜக சார்ந்த கூட்டங்களில் மட்டும் பங்கேற்று வருகிறார். கள அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பது போல அண்ணாமலை காட்டிக் கொண்டாலும் தன்னுடைய ஆதரவாளர்கள் மூலமாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அவர் குடைச்சல் கொடுப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இதனை அறிந்த பாஜக தலைமை தமிழகத்தில் கூட்டணிக்கு சேதாரம் வரக்கூடாது என்பதற்காக மேற்கு வங்க தேர்தல் பொறுப்பாளராக அவரை நியமிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.