டெல்லியின் புறநகர் பகுதியான ஸ்வரூப் நகரில், 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் சடலத்தை வயல்வெளியில் வீசிவிட்டு இலைகள் மற்றும் சேற்றால் மூடி மறைக்க முயன்ற 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 13-ம் தேதி குஷாக் சாலை அருகே உள்ள ஒரு திறந்தவெளிப் பகுதியில் நாய்கள் ஏதோ ஒன்றை கடித்துக் குதறுவதை அப்பகுதி மக்கள் கவனித்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. உடல் விலங்குகளால் கடுமையாக சிதைக்கப்பட்டிருந்ததால், தொடக்கத்தில் அவரை அடையாளம் காண்பதில் காவல்துறையினருக்குச் சிரமம் ஏற்பட்டது.
இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 19 வயதான சிவம் கணேஷ் (எ) சுதாமா மற்றும் 16 முதல் 17 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 17 வயது சிறுவனை ஏற்கனவே தெரியும் என்றும், சம்பவத்தன்று அவரைச் சந்திக்கச் சென்றபோதுதான் இந்தச் சோகம் நடந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்தது எப்படி? 17 வயது சிறுவனைச் சந்திக்கச் சென்றபோது, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப் போவதாக சிறுமி எச்சரித்ததால், அந்தச் சிறுவன் தனது நண்பர்களை அங்கு வரவழைத்துள்ளார். அனைவரும் மதுபோதையில் இருந்ததாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக ஒரு வயல்வெளிக்குக் கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து கத்தியால் பலமுறை குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இந்த வன்கொடுமை டெம்போவுக்குள் நடந்ததா அல்லது வயல்வெளியில் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிசிடிவி மூலம் சிக்கிய குற்றவாளிகள்: அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, குற்றச் சம்பவம் நடந்த இடத்தின் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு டெம்போ வாகனம் நின்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பதிவு எண் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், சிசிடிவி மேப்பிங் மற்றும் உள்ளூர் விசாரணைகள் மூலம் வாகனத்தைக் கண்டறிந்தனர். விடிய விடிய நடைபெற்ற தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கட்டா காலனியில் பதுங்கியிருந்த குற்றவாளிகள் நால்வரும் பிடிபட்டனர்.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகள், ரத்தக்கறை படிந்த ஆடைகள் மற்றும் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட டெம்போ ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, கொலை, சாட்சிகளை அழித்தல் மற்றும் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் ஒவ்வொருவரின் பங்கு மற்றும் சம்பவத்தின் துல்லியமான பின்னணியை உறுதிப்படுத்த தடயவியல் மற்றும் தொழில்நுட்பச் சான்றுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



