சமீப காலமாக குடும்ப வன்முறை மற்றும் மனரீதியான துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. குறிப்பாக, திருமணமான சில ஆண்டுகளிலேயே குடும்பப் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் காரணமாக பலர் பாதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரை சேர்ந்தவர் 27 வயதான அனிகேத் பாலாசாஹேப் ஜக்தாப். கடந்த ஆண்டு இவருக்கும் பஞ்சஷீல் நகரைச் சேர்ந்த ஸ்ருதி ஜக்தாப் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆனது முதல், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, ஸ்ருதி, அனிகேத்துடன் சேர்ந்து வாழ மறுத்ததோடு, அவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்ததால், கடந்த பல மாதங்களாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அனிகேத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும், உயிரிழந்த அனிகேத்தின் தந்தை பாலசாஹேப் ஜக்தாப் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர், தொடர்ச்சியான துன்புறுத்தல்களைத் தாங்க முடியாமல் அனிகேத் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து, கேம்ப் போலீசார் சந்தேகத்தின் பேரில் அனிகேத்தின் மனைவி ஸ்ருதி ஜக்தாப், அவரது தாய் வந்தனா சுபாஷ் திவ்ரே, தந்தை சுபாஷ் சுக்தேவ் திவ்ரே மற்றும் அத்தை உஜ்வலா சதீஷ் பவார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஸ்ருதி ஜக்தாப் மற்றும் அவரது உறவினர்கள் அனிகேத்தை மனரீதியாகத் துன்புறுத்தி தற்கொலை முடிவை எடுக்கத் தூண்டியது தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஸ்ருதியின் பெற்றோரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஸ்ருதியும் மற்றும் அவரது அத்தையையும் தேடி வருகின்றனர். மேலும், ஸ்ருதி மற்றும் அவரது அத்தையை உடனடியாகக் கைது செய்யாவிட்டால், தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்வோம் என அனிகேத்தின் குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர்.
திருமணமான ஒரு வருடத்தில், தொடர்ச்சியான துன்புறுத்தல்களைத் தாங்க முடியாமல், அனிகேத் தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


