திருமணத்திற்கு பிறகும் காதலை மறக்க முடியாமல் தவித்த மனைவியின் விருப்பத்தை உணர்ந்து, அவரை அவரது முன்னாள் காதலனுக்கே கணவரே முன்னின்று திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மாலிஹாபாத் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும், பிஆர்டி (PRD) பிரிவில் பணியாற்றும் ராணுவ வீரர் ஒருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு குடும்பத்தாரின் வற்புறுத்தலால் திருமணம் நடைபெற்றது. ஆனால், அப்பெண் பள்ளியில் தன்னுடன் படித்த முன்னாள் காதலனைத் தொடர்ந்து நேசித்து வந்துள்ளார். திருமணத்திற்குப் பின்னரும் இவர்களது தொடர்பு நீடித்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்து அப்பெண் காதலனுடன் ஹர்தோய் பகுதிக்குச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், இருவரையும் தீவிரமாகத் தேடிக் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையின் போது, “எனக்கு கணவருடன் வாழ விருப்பமில்லை; காதலனுடன் மட்டுமே வாழ்வேன்” என்று அந்தப் பெண் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மனைவியின் மனநிலையைப் புரிந்துகொண்ட ராணுவ வீரர், தன்னை விரும்பாத பெண்ணைக் கட்டாயப்படுத்தி தன்னுடன் வைத்திருக்க விரும்பவில்லை எனக் கூறி, அவரது முடிவை ஏற்றுக்கொண்டார். இரு குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் உள்ளூர் கோவில் ஒன்றில் அப்பெண்ணுக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.



