உணவு விநியோக தளமான சோமேட்டோ (Zomato), தனது தளத்தில் போலி பனீர் மற்றும் செயற்கை சீஸ் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளை விற்கும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
அதாவது, பால் அல்லாத, தாவர எண்ணெய் மற்றும் கெமிக்கல் கலவைகளால் தயாரிக்கப்படும் ‘அனலாக்’ (Analogue) பால் பொருட்களுக்கு சோமேட்டோ “முழுமையான தடை ” (Zero-tolerance) கொள்கையை அறிவித்துள்ளது. இதுபோன்ற உணவுகளை விற்கும் உணவகங்கள் தளத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
உணவகங்கள் தங்களுக்கு வரும் மூலப்பொருட்களின் லேபிள்களைச் சரிபார்த்து, அசல் பால் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அசல் பனீர் அல்லது சீஸ் பயன்படுத்த முடியாத உணவகங்கள், அந்த உணவுகளைத் தங்கள் மெனுவில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சரியான மற்றும் ஆரோக்கியமான உணவை வழங்குவதே எங்கள் நோக்கம்,” என சோமேட்டோ தலைமை நிர்வாகி ஆதித்யா மங்லா தெரிவித்துள்ளார்.
அனலாக் (Analogue) பால் பொருட்கள் என்றால் என்ன?
அசல் பால் பொருட்களின் சுவை, மணம் மற்றும் தோற்றத்தைப் போலவே இருக்கும் வகையில், தாவர எண்ணெய் மற்றும் செயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுபவையே அனலாக் பொருட்கள் ஆகும். உணவகங்கள் தங்களின் செலவைக் குறைக்க இவற்றைச் மலிவாக வாங்கிப் பயன்படுத்துகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் அசல் பனீருக்குப் பதிலாகப் போலி உணவை அறியாமலேயே உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
சமீபகாலமாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் (FSSAI) மற்றும் மாநில உணவுப் பாதுகாப்புத் துறையினர் போலி பால் பொருட்களுக்கு எதிராக நடத்தி வரும் சோதனைகளின் தொடர்ச்சியாகச் சோமேட்டோ இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.



