பாலசமுத்திரம் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சார்ந்த கொத்தனார் வேலை செய்யும் கோபி என்பவரது மகன் மௌனீஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் இன்று மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது சிறு கற்களை கொண்டு சமமாணவர்களின் மீது வீசி விளையாடி இருக்கின்றனர். அப்போது மூன்று மாணவர்கள் மௌனீஸ்வரன் தான் தங்களின் மீது கற்களை வீசினான் என நினைத்து அந்த மாணவனை தாக்கியிருக்கின்றனர். இதில் காயமடைந்த மௌனீஸ்வரனை பள்ளி நிர்வாகம் ஆம்புலன்ஸ் மூலமாக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தது. அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அரசு பள்ளிக்கு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவப் பகுதிக்கு வருகை புரிந்த முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தாக்குதல் நடத்திய மூன்று மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிக்கு முன்பாக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவன் பள்ளி வளாகத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.