மத்திய பிரதேச மாநிலம் சத்னா பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி நேற்று காலை 7 மணி அளவில் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற இருவர் சிறுமியின் வாயை பொத்தி அருகில் உள்ள புதர் பகுதிக்கு கடத்தி சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் சிறுமியை தேடியுள்ளனர். அப்போது அந்த பகுதியில் இருந்த புதரில் சிறுமி உடம்பில் பலத்த காயங்களுடன் ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற குடும்பத்தினர் போலீசிலும் புகார் அளித்தனர்.
மருத்துவ பரிசோதனையில் சிறுமி 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவ குழுவினர் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
என்ன நடந்தது என்பதை சொல்ல முடியாத நிலையில் திக்கி திணறி சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில், அவரை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை ஒரு மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் 31 வயதான பரோலியா மற்றும் 30 வயதான ரவீந்திர குமார் ரவி என்பதும் இருவரும் கூலித் தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள சிறுமி ஐசியூவில் தீவிர கண்காணிப்பில் உள்ளார். சிறுமி இரண்டு பேரால் வன்கொடுமை செய்யப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்குள்ள காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.