கேரளாவில், ஒரு தனியார் பள்ளி பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட, ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த நான்கு முஸ்லிம் பெண்கள், ஒரு ஆட்டோவில் தங்களுடைய உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். இந்த சூழ்நிலையில்தான் ஒரு தனியார் பள்ளி பேருந்து, குழந்தைகளை இறக்கி விட்டு எதிரே வந்து கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பள்ளி பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதிக்கொண்டனர். இதில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியதில், இந்த ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டுநர், 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிகிறது.
ஆட்டோவும், பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதியதைக் கண்ட அந்த பகுதி மக்கள், அதிர்ச்சி அடைந்து ஒரு நிமிடம் உறைந்து போயினர். பின்னர் சுதாரித்துக் கொண்டு, உடனடியாக காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் வழங்கிய பொதுமக்கள், ஆட்டோவில் சிக்கி இருந்த நபர்களை மீட்க முயற்சி செய்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஐந்து பேரின் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.