கேரளாவில் அறுவை சிகிச்சை முடிந்து மயக்கத்திலிருந்த பெண்ணை மருத்துவமனை ஊழியரே பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவக் கல்லூரியின் நிர்வாகத்திற்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சார்ந்த பெண் ஒருவர் உடல்நிலை பாதிப்பால் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்திருக்கின்றனர் . இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சேர்ந்திருக்கிறார் அந்தப் பெண்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்ததும் அப்பெண்ணை ஐசியூவிற்கு மாற்றுவதற்காக மருத்துவமனையின் ஊழியரான சுசீந்திரன் என்ற 55 வயது நபர் கொண்டு சென்றிருக்கிறார். அப்போது அரை மயக்கத்தில் இருந்த நோயாளியை கொடூர பாலியல் எண்ணம் கொண்ட சுசீந்திரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அரை மயக்கத்தில் இருந்தாலும் தனக்கு என்ன நேர்ந்தது என்று அந்தப் பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது கணவர் மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் அறுவை சிகிச்சை செய்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சுசீந்திரன் என்ற மருத்துவமனை ஊழியரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும் படி மருத்துவக் கல்லூரி டீனுக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்ணை மருத்துவமனை ஊழியரே பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..