திருப்பூரை சேர்ந்த சுப ஸ்ரீ என்ற இளம்பெண் கடந்த டிசம்பர் மாதம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி சுப ஸ்ரீ மாயமானதாக கூறப்படுகிறது. இளம்பெண் காணமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. 6 தனிப்படைகள் அமைத்து, அந்த பெண் எப்படி காணாமல் போனார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதிகளில் உள்ள 100 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அவர் செம்மேடு பகுதியில் ஓடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.
இந்த நிலையில், செம்மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரது தோட்டத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கிணற்றில் இறந்து கிடந்தது சுபஸ்ரீ என்பது தெரியவந்தது. துர்நாற்றம் வீசியதுடன் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெண் எப்படி கிணற்றில் விழுந்தார், ஈஷா யோகா மையத்திற்கு சென்றதர்கான காரணம் என்ன, செம்மேடு அருகே பெண் எதற்காக அவ்வளவு வேகமாக ஓடினார் என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.