பாஜக தலைவராக தொடர முடியாது என்று எனக்கு தெரியும்; ஆனால், நான் இங்கு இருந்து செல்லும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் எடுக்காமல் விட மாட்டேன் என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை; மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் குறைந்தபட்சம் 60 லட்சம் பேர் பயனடைகின்றனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (சமக்ர சிக் ஷா) திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களை கூறிக்கொண்டிருக்கிறார்.
பாஜக தலைவராக தொடர முடியாது என்று எனக்கு தெரியும்; ஆனால், நான் இங்கு இருந்து செல்லும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் எடுக்காமல் விட மாட்டேன். அதேபோல, 2026-ல் 35 ஊழல் அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள். தமிழகத்தில் 2026-ல் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். தமிழிசை தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. அந்த குழு இந்தியா முழுவதும் பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு சென்று, முதல்வர்களை சந்திக்க உள்ளது. அங்குள்ள மக்கள் நலத்திட்டங்களை பார்த்துவிட்டு, 2026 பாஜக தேர்தல் அறிக்கையை தயார் செய்வார்கள்.
மகாராஷ்டிராவில் தற்போது தமிழகத்தைவிட அதிகமாக மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. டெல்லியிலும் ரூ.2,500 அறிவிக்கப்பட்டு உள்ளது. 2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி வந்தால், பாஜக ஆளும் மற்ற மாநிலங்கள் எல்லாவற்றையும்விட, மாதம்தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக இருக்கும்.