சென்னையில் 1,000 சதுர அடி இடத்திற்கு அனுமதி வழங்க ரூ.40,000ஆக இருந்த கட்டணம் ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுமக்கள் சுயசான்று அளித்து, வரைபட அனுமதி பெற அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை என்றும் விமர்சித்துள்ளன. அனைத்து எதிர்க்கட்சிகளுமே இந்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சுயசான்றிதழ் அடிப்படையில், இணையவழி மூலம் சமர்ப்பித்த உடனேயே கூர்ந்தாய்வு கட்டணம் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு கட்டணமின்றி 2,500 சதுரஅடி வரை பரப்பளவுள்ள மனையில் 3,500 சதுர அடி வரையிலான தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த முறையில் அனுமதி வழங்கும்போது, கட்டிட அனுமதி கட்டணமாக 1 சதுர அடிக்கு ரூ.100 வசூலிக்கப்பட வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மக்கள் தனி வீடு கட்டும் நோக்கத்திற்கு வழிவகை செய்கிறது. வணிக நோக்கத்தோடு கட்டுபவர்களுக்காக கொண்டு வரப்படவில்லை. ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் அனுமதி வழங்கும்போது வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.99.70 ஆகும். அதன்படி பார்க்கையில், சுயசான்றின் அடிப்படையில் வழங்கப்படும் அனுமதிக்கான கட்டணங்கள் ஏற்கனவே உள்ள கட்டணங்களுக்கும் எந்தவிதமான வித்தியாசம் இல்லை என்பது தெளிவு.
மேலும், ஒரு சில மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கட்டிடங்களுக்கான சுயசான்றின் அடிப்படையில் வழங்கப்படும் அனுமதி கட்டணம் அதிகமாக இருந்ததை அரசு கவனத்தில் கொண்டு, அதையும் வெகுவாகக் குறைத்துள்ளது. தவறான கருத்தை மக்கள் மத்தியில் பதிவு செய்வதற்காக சிலர் முயற்சி செய்கின்றனர். எனவே, பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள இத்திட்டத்தை நடுத்தர தரப்பு மக்கள் பயன்படுத்தி தங்களின் கனவான வீடு கட்டுவதற்கு எளிமையான முறையில் அனுமதியை பெற்று பயன் பெறலாம்” என்று கூறியுள்ளார்.