இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை பிப்ரவரி 19ம் தேதி அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தினைக் கூட்ட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், வெளியுறவுத் துறை அமைச்சரின் 9.2.2025 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விரிவான பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர், பிப்ரவரி 19 அன்று தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள், அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை மத்திய அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார். இலங்கைக் கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் வேகமாக அதிகரித்துள்ளது.
மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் நீண்ட காலம் பாதிக்கப்படுவதால், இத்தகைய கைது நடவடிக்கைகளைத் தடுத்திட உடனடி மற்றும் தொடர்ச்சியான தூதரக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எனவே, மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து விடுவிக்க ஏதுவாக, உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, தான் ஏற்கெனவே வலியுறுத்தியபடி கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தினைக் கூட்டுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.