சென்னையைச் சார்ந்த சினிமா பைனான்சியர் ஒருவர் தன்னிடம் பணியாற்றிய உதவியாளரை கொடூரமாக கொலை செய்து எரித்துள்ள சம்பவம் சென்னை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை நொளம்பூர் எஸ் பி கார்டன் பகுதியைச் சார்ந்தவர் வெங்கட்ராமன் இவரது வயது 48. இவர் சினிமாவில் பைனான்சியராக இருந்து வருகிறார். மேலும் வட்டி தொழிலும் செய்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி இவரது வீட்டிலிருந்து ஒரு நபரின் அலறல் சத்தம் கேட்பதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் இவரது வீட்டிற்கு வந்தபோது வீட்டில் இருந்தவர்கள் தலைமறைவாக இருப்பதை அறிந்தனர். வீட்டிற்குள் சென்று சோதனை செய்ததில் மாடியில் இருந்த அறையில் ரத்தக்கரைகள் இருப்பதையும் கண்டுபிடித்தனர் காவல் துறையினர். இதனைத் தொடர்ந்து பைனான்சியர் வெங்கட்ராமனை காவல்துறை தொடர்பு கொண்டு பேசியபோது பல அதிர்ச்சியான சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.
வெங்கட்ராமன் மற்றும் அவரிடம் பணி புரியும் மதுரவாயலைச் சார்ந்த திலீப் (30),நவீன் (47), சரவணன் (29) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அவரிடம் கலெக்ஷன் ஏஜென்ட் ஆக பணியாற்றிய அயனம்பாக்கத்தைச் சார்ந்த பாபுஜி(50) என்ற நபரை கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக அந்த நான்கு பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தெரிவித்த வெங்கட்ராமன் தன்னிடம் வேலை செய்த பாபுஜி என்ற நபர் 10 லட்ச ரூபாய் மற்றும் 5 சவரன் நகை ஆகியவற்றை கையாடல் செய்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதன் பிறகு பாபுஜி,வெங்கட்ராமன் குறித்து அவதூறுகளை பரப்பி வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கட்ராமன் மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுஜியை கடத்தி வந்து இரும்பு கம்பியால் தாக்கி இருக்கின்றனர். இதில் பாபுஜி மரணம் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது உடலை காரில் எடுத்து சென்று போரூர் அருகே உள்ள குப்பை கிடங்கில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை அவர்களை சிறையில் அடைத்தது.