கடந்த 40 ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக..? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை 3 நாள் இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சீர்குலைந்து கிடக்கும் சட்டம் – ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறைகள் என தமிழகம் இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று முதலமைச்சர் ஸ்டாலின் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்.
அவரது இன்றைய நாடகம், கச்சத்தீவு மீட்புத் தீர்மானம். கடந்த 20 ஆண்டுகளில், இலங்கை அரசால் ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், மறைந்த கருணாநிதி அவர்கள், கடந்த 1974இல் முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் சேர்ந்து, கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக் கொடுத்ததுதான்.
கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்து மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக. கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக மீனவ மக்களுக்குச் செய்த துரோகம், உங்களுக்கு ராஜதந்திரமா..?
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த பிறகு பல முறை, மத்திய அரசில் பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மௌனம் மட்டுமே சாதித்துக் கொண்டிருந்தது திமுக. கடந்த 40 ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக..? திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை ராணுவத்தால் 80-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகள் என, தமிழகம் இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார்… pic.twitter.com/VT7kqrhIje
— K.Annamalai (@annamalai_k) April 2, 2025
அப்போது, மத்திய அமைச்சர்களாக இருந்து ஊழல் செய்வதில் மட்டுமே மும்முரமாக இருந்த திமுக, தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2014இல் இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது, அவர்களை பத்திரமாக மீட்டது பிரதமர் மோடி தான். மோடி பிரதமராக பொறுப்பேற்ற உடன் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள்.
கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, 50 ஆண்டுகள் மௌனமாக இருந்து தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்போம் என்று கபட நாடகம் ஆடும் ஸ்டாலின் அவர்களையோ, திமுக காங்கிரஸ் கூட்டணியையோ, பொதுமக்கள் நம்பப் போவதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : மத்திய அமைச்சராகிறார் அண்ணாமலை..? தமிழக பாஜகவின் புதிய தலைவர் வரும் 9ஆம் தேதி அறிவிப்பு..?