இந்தியாவின் மராட்டிய மாநில பகுதியில் உள்ள சோலாப்பூரில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத பல ஆண்கள் இணைந்து புதிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஆண்கள் சிலர் மணமகன் போன்று ஆடையணிந்து கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் சிலர் மணமகன் போல் அலங்காரத்தினை செய்து கொண்டு வாத்தியங்கள் முழங்க குதிரையில் ஊர்வலமாக வந்து பேரணியில் ஈடுபட்டனர். அத்துடன் அவர்கள் தங்களுக்குத் திருமணம் செய்வதற்கு அரசு மணப்பெண் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கோரியை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த மனுவில், தாயின் வயிற்றில் இருக்கும் கருவின் பாலினத்தை கண்டறிந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை அளித்துள்ளனர். பேரணிக்கு ஏற்பாடு செய்த ஜோதி கிராந்தி பரிஷத் நிறுவனரான ரமேஷ் இதனை பற்றி கூறும் போது,
இவ்வாறு நாங்கள் தொடுத்த பேரணியை பலர் கேளி செய்யலாம். அதற்கான மறுக்க முடியாத காரணம் ஆண் பெண் விகிதாச்சாரம் மாறுபட்டு இருப்பது தான். ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பது பெரும் போராட்டமாக இருக்கிறது என்பதே கசப்பான உண்மை.
இந்த நிலையில் மராட்டிய மாநில பகுதியில் வசிக்கும் ஆயிரம் ஆண்களுக்கு சுமார் 889 பெண்கள் மட்டுமே இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் பெண் சிசுவை வதை செய்வது தான். அத்துடன் பெண் சிசு வதையைத் தடுப்பதில் மாநில அரசும் தவறிவிட்டது என்று குற்றத்தினை சாட்டியுள்ளார்.