பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் மாவட்ட அளவில் நடத்திப் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தாய்த் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பின் படி, தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் மாவட்ட அளவில் நடத்திப் பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பெற உள்ளன.
இதன்படி, தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு 05.07.2022 அன்று முற்பகல் 10.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளலாம்.

கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளுக்குரிய தலைப்புகள் பின்வருமாறு :
தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர்தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப்போர்த் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகியவை போட்டிக்கான தலைப்புகள் ஆகும்.
மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7000, மூன்றாம் பரிசாக ரூ.5000 வழங்கப்படுகிறது. இது தொடர்பில் கீழ்நிலை அளவில் முதன்மைக் கல்வி அலுவலரால் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு மாவட்ட அளவில் நடைபெறும் இந்த போட்டிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் 25 பேர் கொண்ட மாணாக்கர்கள் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படவுள்ளது. எனவே பள்ளி மாணாக்கர்களுக்கான இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் உரிய வட்டாரக் கல்வி அலுவலர்களையோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையோ தொடர்பு கொள்ளலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.