ஆந்திராவில் முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விரைவில் பாஜகவில் இணைய உள்ளார்.
கிரண்குமார் ரெட்டி 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து விலகி, 2018-ஆம் ஆண்டு டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்து தன்னை மறுபடியும் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். இந்தநிலையில் தற்போது மீண்டும் தனது விலகல் கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ளதால், மூத்த தலைவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு கடிதம் மூலம் அனுப்பினார். அந்தக் கடிதத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கட்சியை விட்டு விலகுவதற்கான காரணங்களை அவர் குறிப்பிடவில்லை.