கோவில் அன்னதான நிகழ்வு ஒன்றில், பந்தி பரிமாற சென்ற தொழிலாளி தவறி குழம்பில் விழுந்து, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அருகே இருக்கின்ற பள்ளக்காடு பகுதி அம்மாசி தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் என்பவரின் மகன் பார்த்திபன் (24). இவர் சென்ட்ரிங் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர், சென்ற 13ஆம் தேதி கரூர் மாவட்டம் தோகைமலை அருகே இருக்கின்ற, ஆர்.டி.மலை பகுதியில் இருக்கின்ற கரையூரான் நீலமேகம் ஆலயத்தில், நடைபெற்ற ஆடி மாதம் 28ஆம் நாள் பூஜையில் பங்கேற்று கொண்டார். அதன் பிறகு பார்த்திபன், அந்த ஆலயத்தில் நடந்த அன்னதான நிகழ்வுக்கு சென்று, அன்னதானத்தை பரிமாறிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில், சாதத்தை எடுப்பதற்காக பார்த்திபன் சாதம் இருக்கும் பகுதிக்கு சென்றார். அந்த சாதத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் அன்னதான பந்தலுக்கு செல்லும்போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய பார்த்திபன், அங்கே இருந்த குழம்பு அண்டாவில் விழுந்தார்.
இதைப் பார்த்த அங்கு இருந்த இளைஞர்கள், அவரை குழம்பு அண்டாவிலிருந்து தூக்கி, உடனடியாக அவசர ஊர்தி மூலமாக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, பார்த்திபனின் தந்தை ரவிக்குமார் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதனை அடிப்படையாகக் கொண்டு, வழக்குப்பதிவு செய்த தோகைமலை காவல் நிலைய காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார், விசாரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த பார்த்திபனுக்கு திருமணமாகி, மனைவியும்,ஒரு மகனும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.