மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என மழைக்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது வேதனையை தெரிவித்ததோடு மத்திய-மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டது.
நேற்று முன்தினம், சிபிஐ இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை மணிப்பூர் மாநிலத்திற்கு வெளியே நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் இதுகுறித்த வழக்கு விசாரணை ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படும். இந்த விவகாரத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு 6 வழக்குகளை சிபிஐ-யிடமும், 3 வழக்குகளை தேசிய புலனாய்வு முகமையிடமும் ஒப்படைத்துள்ளது.