தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையில் 6வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார். இதேபோல், வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்களுக்கு, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துச்சாமிக்கு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் தமிழக அமைச்சரவையில் மனோ தங்கராஜ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழக அமைச்சராக இன்று(ஏப். 28) மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ். அமைச்சர் மனோ தங்கராஜுக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பால் வளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில், நீதிமன்றத் தலையீடு காரணமாக தற்போது அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.