கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் அடுத்த செந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கவுரி (26). இவருக்கும் கேத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜீவன் (4) என்ற மகனும், பாவனா ஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துராஜ் ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் முத்துராஜுக்கும், கவுரிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி தகராறில் முத்துராஜிடம் ஆத்திரமடைந்த கவுரி, இரண்டு குழந்தைகளுடன் செந்தரப்பள்ளியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.
கடந்த ஒரு வாரமாக குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்து காணப்பட்ட கவுரி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த 3 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு 3 பேர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கவுரின் குழந்தைகள் ஜீவன், பாவனா ஸ்ரீ ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கவுரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாய் தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்றதால் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து கந்திக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.