சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றன.ஆனால் தமிழக காவல்துறையினர் இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறார்கள். அப்படி மேற்கொண்டாலும் கூட அவர்களால் இது போன்ற செயல்களை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.
அந்த வகையில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமணாராவ்(56). இவர் கடந்த 4 தேதி எழும்பூர் பாந்தியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பக்கமாக இன்னொரு இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் ராமனாவை தாக்கி விட்டு அவருடைய கைபேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர், இது தொடர்பாக எழும்பூர் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
முதல் கட்டமாக சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அதன் மூலமாக நடத்தப்பட்ட விசாரணையில், ரமணாவிடம் வழிப்பறியில் ஈடுபட்டது மந்தைவெளி சாலையோர தெருவை சேர்ந்த சந்தோஷ் குமார்(20) மற்றும் அவருடைய நண்பரான திருவான்மியூரை சேர்ந்த நிதிஷ்(20) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் எழும்பூர், வேப்பேரி தெரு, அண்ணா சதுக்கம், கேகே நகர், அசோக் நகர், வடக்கு கடற்கரை, திருவான்மியூர் சாஸ்திரி நகர், வேளச்சேரி உட்பட அடுத்தடுத்து 15 பேரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.