இப்போதெல்லாம் ஒருவருடன் பகை என்று ஏற்பட்டு விட்டால் உடனடியாக அந்த பகைக்கு காரணமாக இருந்தவரை தீர்த்து கட்டி விட வேண்டும் என்பதில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
பிரச்சனை என்று ஏற்பட்டுவிட்டால் பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணலாம் என்ற தேர்வு இருக்கிறது என்பதை மக்கள் அறவே மறந்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில், சென்னை வடபழனி 100 அடி சாலை பகுதியில் அன்னை அலுமினியம் டிரேடர்ஸ் கடை அருகே பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு நபர் அடித்து கொலை செய்யப்பட்டதாக வடபழனி காவல்துறையினருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்து இருக்கின்றனர். இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபர் ஜேம்ஸ் தேவராஜ் (62) இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து கொண்டிருந்தார் எனவும், சூளைமேட்டில் உள்ள அவருடைய மகள் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்தார். எனவும் இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் வடபழனியில் இருக்கின்ற பிளாட்பாரத்தில் தூங்குவதற்காக சென்றபோது, ராஜ்குமார் என்பவருடன் தகராறு ஏற்பட்டிருக்கிறது என்ற விவரம் தெரியவந்தது.
இந்த தகராறில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஜேம்ஸ் தேவராஜை ராஜ்குமார் கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். அதன் பிறகு தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
இதனை தொடர்ந்து, காவல்துறையினர் ராஜகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்திருக்கிறார்கள்.