சென்னை போரூரை அடுத்துள்ள ஐயப்பன்தாங்கல் சுப்பிரமணியம் நகர் பொன்னியம்மன் கோவில் தெருவில் சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 இருசக்கர வாகனங்களில் ஆறு பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை வெட்டுவதற்காக துரத்தி உள்ளனர். ஆகவே அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றார்.
அப்போது சாலையில் இருந்த வேகத்தடையின் மீது மோதி தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவரை வெட்டுவதற்கு அந்த கும்பல் விரட்டியதால் உயிருக்கு பயந்து அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து அந்த வாலிபர் கதவை அடைத்துள்ளார். ஆனாலும் விடாமல் துரத்திச் சென்ற அந்த கும்பல் கதவை உடைத்து அந்த வாலிபரின் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில் அந்த வாலிபரின் 2 கைகளும் துண்டாகிப் போனது.
அதோடு கொலை செய்யப்பட்ட அந்த இளைஞர் யார்? என்று அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக முகத்தை வெட்டி சிதைத்து விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போரூர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதோடு இந்த சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு ஆவடி காவல் துறை இணை ஆணையர் விஜயகுமார், துணை ஆணையர் பாஸ்கரன், உதவி ஆணையாளர்கள் ராஜீவ் பிரிண்ஸ், அரோண் முத்துவேல் பாண்டி, ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? கொலை செய்தவர்கள் யார்? எதற்காக இந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தனர் என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
அதோடு கொலை செய்யப்பட்ட அந்த இளைஞர் வந்த இருசக்கர வாகனம் கைபேசி உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர் அதன் மூலமாக துப்புத் துலக்கி வருகின்றனர். அதோடு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கின்ற பகுதியில் ஒரு இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போரூர் பகுதியில் பீதியை கிளப்பி இருக்கிறது.