மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவெடுக்கப்பட்டது. மேலும் சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதமும் மாற்றியமைக்கப்பட்டது.
இந்த புதிய வரி விதிப்பு நடை முறைகள் அனைத்தும் கடந்த 18-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த வரிவிதிப்பில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி (உறைந்தது தவிர), மீன், பன்னீர், தேன், கோதுமை மாவு மற்றும் பிற தானியங்கள், தயிர் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றுக்கு 5 % ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பால் பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதன் காரணமாக தயிர் மற்றும் நெய் விலையை அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி,
ஒரு லிட்டர் நெய்க்கு 50ரூபாயும் ஒரு லிட்டர் தயிருக்கு ரூ 10 ரூபாய் உயர்ந்துள்ளது.
100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது.
200 கிராம் தயிர் விலை 25 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்ந்துள்ளது.
பிரீமியம் தயிர் ஒரு லிட்டர் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஒரு லிட்டர் நெய் 538 ரூபாயில் இருந்து 580 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அரை லிட்டர் நெய் 275 ரூபாயில் இருந்து 290 ரூபாயாக உயர்ந்துள்ளது.
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.