கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத விதத்தில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் அதிமுக ஆட்சியை இழந்தது.
அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அதிமுக இபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி இரண்டாக பிளவு பட்டு இருந்தது. இருவரும் இரு பிரிவினராக பிரிந்திருந்தால் நிச்சயமாக வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்து கொண்ட பாஜக, அப்போதே இருவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனாலும் பாஜகவின் முயற்சி பலன் அளிக்கவில்லை.
விளைவு சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுகவை தோற்கடித்து திமுக ஆட்சியை கைப்பற்றியது.இந்த நிலையில் தான் தற்போது ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி தென்னரசுவையும், பன்னீர்செல்வம் அணி செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்தனர். இதற்கு நடுவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளருக்கு பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை வைத்தார்.
இந்த சூழ்நிலையில்தான் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் தரப்பு இரட்டை இலை முடங்கிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக, தங்களுடைய தரப்பு வேட்பாளரை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதோடு இரட்டை இலை சின்னம் வெற்றி பெற உழைப்போம் என்று தெரிவித்தது. இன்று காலை அதிமுகவின் சார்பாக தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் தான் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசுவுக்கு பாஜக தன்னுடைய முழுமையான ஆதரவை வழங்குகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டபூர்வ அதிமுக அமைப்பாளரை முன்னிறுத்தியிருக்கும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பொதுநலன் கருதி கூட்டணி நன்மையை மனதில் வைத்து தங்களுடைய வேட்பாளரை திரும்ப பெற்றிருக்கும் பன்னீர்செல்வத்திற்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்.
திமுக அரசை வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும் நாம் எல்லோரும் அதிமுகவின் அதிகாரப்பூர்வமான வேட்பாளர் தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், பாஜகவின் தொண்டர்கள் வெற்றிக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.