கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளியை சேர்ந்தவர் பெருமாள்(63). இவர் இருசக்கர வாகனத்தின் மூலமாக பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஊர் ஊராக எடுத்துச் சென்று விற்பனை செய்யும் தொழிலை செய்து கொண்டிருக்கிறார்.
இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் பாத்திரம் வியாபாரியான பெருமாளுக்கும், அவருடைய தம்பியின் மகன் சக்திவேல்(23) என்ற இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இவர்கள் இருவரின் வீடுகளும் அருகருகே இருக்கின்றன. இந்த நிலையில் தான் சக்திவேல் தன்னுடைய வீட்டில் ஹோம் தியேட்டரில் அதிகமாக சத்தம் வைத்து பாட்டு கேட்டு இருக்கிறார். இது பெருமாளுக்கு தொந்தரவாக இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இதே விவகாரத்தை முன்வைத்து நேற்று முன்தினம் மாலையும் பெருமாள் மற்றும் சக்திவேல் உள்ளிட்டோருக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் சக்திவேல் பெருமாள் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் நேற்று காலை வழக்கம் போல வியாபாரத்திற்காக கிளம்பிச் சென்ற பெருமாளை ராயக்கோட்டை எச்சம்பட்டி சாலையில் கிருஷ்ணன் என்பவரின் நிலத்தின் அருகே ஒரு மர்ம நபர் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த ராயக்கோட்டை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினரின் விசாரணையில் பெருமாளுக்கும் அவருடைய தம்பி மகனுக்கும் இருந்த பிரச்சனை தொடர்பாக தெரிய வந்தது. இதனையடுத்து மேற்கொண்டு விசாரணை செய்ததில் நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்ட சக்திவேல் நேற்று காலை வியாபாரத்திற்காக சென்ற பெருமாளை கொலை செய்திருக்கிறார் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சக்திவேலை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.