பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களை எப்போதும் தங்களுடைய குருவாகத்தான் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் தங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு படிக்கட்டுகளாக மாறும் என்ற நம்பிக்கையில் பள்ளியிலும், கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களை நம்பித்தான் படித்துவருகிறார்கள்.
சேலம் மாவட்டம் பாப்பம்பாடி பகுதியில் இருக்கின்ற உயர்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் ஒட்டுமொத்தமாக 14,961 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த வீரவேல் என்ற நபர் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் இந்த பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவிகளை அவ்வப்போது அவர் பாடல்கள் பாடி கிண்டல் செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக பள்ளி மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் ஆய்வக உதவியாளர் வீரவேல் மீது புகார் வழங்கி வாக்குவாதம் செய்தனர்.
இந்த வாக்குவாதத்தின் மிகுதியாக ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் அந்த லேப் அசிஸ்டன்ட் வீரவேலை தாக்கி இருக்கிறார்கள். இந்த நிலையில், கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி அவரை சிறைபிடித்தனர். இது குறித்து காவல்துறை ஆணையாளர் லாவண்யா மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து சென்றனர்.
அதன் பிறகு வீரவேலை மீட்டு விசாரணைக்காக சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து வீரவேல் மற்றும் தலைமை ஆசிரியை சுஜாதா உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வீரவேல் சில்மிஷம் செய்தது உண்மைதான் என தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினரிடம் வீரவேல் மீது பெற்றோர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.